சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கத் தொடங்கிய அதிதீவிர நிவர் புயலானது, தற்போது மேலும் வலுவிழந்து புயலாக மாறியது.
கரையைக் கடந்து, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நகர்ந்து வந்த தீவிர நிவர் புயல், புயலாக வலுவிழந்து, தொடர்ந்து வழக்கு - வடமேற்காக நகர்ந்து வருகிறது.
இது புதுச்சேரியிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 95 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. நிவர் புயலுக்கு இணையாக சுட்டுரையில் வீசிய மற்றொரு ஹிந்தி புயல்
நிவர் புயல் காரணமாக ராணிப்பேட்டையின் சோளிங்கரில் காலை 7 மணி முதல் 11 மணி வரை 8.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்குப் பகுதியில் அதிதீவிரப் புயலாக மாறி 16 கி.மீ. வேகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு கரையை கடந்தது. அதி தீவிர நிவர் புயல் கரையை கடக்கும்போது புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் அதிகனமழை பெய்தது.
அதிகாலை 3.30 மணியளவில் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. அப்போது 120 முதல் 140 கி.மீ. வரை காற்று வீசியது.