செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு அடுத்த மாமல்லபுரம் அருகே நிவர் புயல் கரையைக் கடப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து மாமல்லபுரம் கடற்கரை மற்றும் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை மாமல்லபுரத்திற்கு வந்த சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் கடற்கரைப் பகுதிகள், மருத்துவமனை மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் சென்று சந்தித்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் கேட்டறிந்தார்.
மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். உடன் செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம், அதிமுக மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ராகவன், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செங்கல்பட்டு மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு 450 ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனையில் 800 படுக்கைகளும் தயாராக உள்ளது. மேலும், மீட்புப் பணிக்கான உபகரணங்கள், மீட்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள், தீயணைப்புத்துறையினர் என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது எனத் தெரிவித்தார்.