திருப்பூர்: திருப்பூரில் வயதான மாமனாரின் 80 சென்ட் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தார்.
திருப்பூர், கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.சவிதா(34) என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டலிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நான் கணக்கம்பாளையம் மேற்குவீதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் ரவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். எனது இரு பெண் குழந்தைகளுடன் மாமனார் சாமியப்பன், மாமியார் பாலாமணி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம்.
எனது மாமனாரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக உள்ளார். எனது மாமனாருக்கு சொந்தமாக கணக்கம்பாளையத்தில் உள்ள 80 சென்ட் நிலத்தை மாமியாரின் உறவினரான செளந்தராஜன் நம்பிக்கை மோசடி செய்து தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டார்.
இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இந்த நிலையில், எனது மாமனார் சாமியப்பனைக் கடத்தி வைத்துக் கொண்டு வழக்கை வாபஸ் வாங்கும்படி திமுக பிரமுகர் மூலமாக மிரட்டல் விடுக்கின்றனர். ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனது மாமனாரின் சொத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.