நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளன. வேளச்சேரி பகுதிகளில் முழங்கால் வரை நீர் தேங்கியிருக்கும் புகைப்படங்கள் மற்றும விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நிவர் புயல் நாளை கரையைக் கடக்கவிருப்பதால், இதன் தீவிரத் தன்மை நாளையே உணரப்படும் என வானிலை ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. இதனால், நாளை மழையின் தீவிரம் மேலும் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.