சீர்காழி: சீர்காழி அருகே நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, மாவட்ட பேரிடர் மீட்பு படை பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.
தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று காலை நிவர் புயலாக வலுவடைந்தது. இது மாமல்லப்புரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே 25-ம் தேதி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்துக்கு உட்பட்ட சீர்காழி காவல் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் அறிவுறுத்தலின்படி பேரிடர் மீட்பு படை வீரர்கள் 50 பேர் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது.
இதையும் படிக்கலாம்.. வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்
இவை 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும் மாநில பேரிடர் மீட்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணிக்குத் தேவையான மரம் அறுக்கும் இயந்திரம், ஜெனரேட்டர், பாரை, மண்வெட்டி, கயிறு, டயர் டியூப், மண் மூட்டைகள் உள்ளிட்ட மீட்பு பொருள்கள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் ஆய்வு மேற்கொண்டு அனைத்து நேரத்திலும் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட வேண்டுமென காவலர்களுக்கு தெரிவித்தார். அப்போது டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.