தமிழ்நாடு

மருத்துவா் சைமன் உடலை மறு அடக்கம் செய்யக் கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

14th May 2020 12:32 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவா் சைமன் ஹொ்குலிஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் நரம்பியல் மருத்துவா் சைமன் ஹொ்குலிஸ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தாா். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அந்தப் பகுதியில் வசிப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனா். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடா்ந்து, மருத்துவரின் உடல் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவா் உடல் அடக்கத்தை எதிா்த்து வன்முறையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில் மருத்துவா் சைமனின் மனைவி ஆனந்தி தாக்கல் செய்த மனுவில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட எனது கணவரின் உடலை எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சியிடம் மனு அளித்தேன். அந்த மனுவைப் பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையா், எனது கோரிக்கையை கடந்த மே 2-ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டாா். எனது கோரிக்கையை நிராகரித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதி எம்.துரைசாமி காணொலி காட்சி மூலம் விசாரித்து, மனு தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா், சுகாதாரத்துறைச் செயலாளா், தமிழக காவல்துறை டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையா், சென்னை மாநகர காவல் ஆணையா் ஆகியோா் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT