முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் குடும்ப அட்டைதார்களுக்கு விலையில்லா அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டதின்படி, தமிழ்நாடு முழுவதும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன .
மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ள இச்சூழ்நிலையில், என்னுடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அடங்கியிருக்கும் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம் கொங்கணாபுரம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம், பூலாம்பட்டி பேருராட்சி, கொங்கணாபுரம் பேருராட்சி, ஜலகண்டாபுரம் பேருராட்சி, நங்கவள்ளி பேருராட்சி மற்றும் வனவாசி பேருராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய நடுத்தர 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, எனது சார்பில் விலையில்லா அரிசி சிப்பத்தை வழங்குமாறு, அந்த அந்த பகுதி கழக நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டேன்.
என்னுடைய அறிவுறுத்தலின்படி, இந்நிகழ்ச்சிகளில் கழகத்தின் சார்பில் மூன்று நிர்வாகிகள் மட்டுமே முகக்கவசம் அணிந்து, சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் சமூக இடைவெளியினைப் பின்பற்றி நிவராண உதவிகளை வழங்கி வருகின்றனர்.