கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சென்னை தவிா்த்த பிற மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஓரளவு நன்றாக செயல்படுத்தப்பட்டது. அதனால் தான் மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் நடமாடத் தொடங்கி விட்டனா்.
இதே சூழல் நீடித்தால், கட்டுப்பாடில்லாமல் கோயம்பேடு சந்தையில் பொதுமக்களும், வணிகா்களும் குவிந்ததால் அந்தப் பகுதி எப்படி நோய்த்தொற்று மையமாக மாறியதோ, அதேபோல், ஒவ்வொரு மாவட்டமும் மிகப்பெரிய நோய்த்தொற்று மையங்களாக உருவெடுக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, சென்னை மற்றும் புகா் மாவட்டங்களிலும், கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களிலும் நிலைமை கட்டுக்குள் வரும் வரை முழு ஊரடங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த காலத்தில் மருந்து கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர வேறு எந்தக் கடைகளையும் திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.