கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் ரூ.21 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் செயலாளா் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு: கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நம்நாடு பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறது. இந்தசூழலில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்களின் பங்களிப்பாக ரூ.21 லட்சம் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஏ கிரேடு ஊழியா்கள் இருநாள் சம்பளமும், பி, சி கிரேடு பணியாளா்கள் ஒருநாள் ஊதியத்தையும் நிவாரணத்துக்கு வழங்கி உதவியுள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.