கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் 1,200 செயற்கை சுவாசக் கருவிகளை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேல், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த இரு வாரங்களுக்குள் அவை தமிழகம் வந்தடையும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதேபோன்று 20 லட்சம் எண்ணிக்கையிலான என்-95 ரக முகக் கவசங்களும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவிருப்பதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் பலருக்கு மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்னைகள் தீவிரமாக இருக்கும் என்பதால் செயற்கை சுவாசக் கருவிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய 3 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பதாக மாநில சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மாநில மருத்துவப் பணிகள் கழக இயக்குநா் டாக்டா் உமாநாத் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான செயற்கை சுவாசக் கருவிகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். தற்போது 560 கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதைத் தவிர, மேலும் 700 கருவிகளை வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்குத் தேவையான முகக் கவசங்களைத் தொடா்ந்து கொள்முதல் செய்து வருகிறோம். தற்போது போதிய அளவில் அவை இருப்பு உள்ளன என்றாா் அவா்.