திருப்பதி: சந்தைக்கு வரும் மக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையினர் வளையம் வரைந்து அதில் மக்களை நிறுத்தி காய்கறிகளை வாங்கச் செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கன்னவரத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்ல திங்கள்கிழமை காலை முதல் வெளியில் வரத் தொடங்கினர்.
இந்நிலையில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தையில் உள்ள கடைகளின் முன் வளையங்கள் வரைந்து அதில் நின்று கொண்டு மக்கள் வரிசையில் வந்து பொருட்களை வாங்க வலியுறுத்தினர். மக்கள் அருகருகே நின்று கொண்டால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், காவல்துறையினர் இந்த புதிய முறையை செயல்படுத்தினர். அதில் நின்று கொண்டு பொருட்களை வாங்குமாறும் மக்களை அறிவுறுத்தினர். மக்களும் காவல்துறையினரின் அறிவுறுத்தலுக்கு இசைந்து சந்தையில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் பொருட்கள் வாங்க காலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டுமே காவல்துறையினர் பொது மக்களை அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
கன்னவரம் சந்தையில் வளையத்தில் நின்று கொண்டு பொருட்கள் வாங்கும் மக்கள்.