கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, ராமதாஸ் தன் ட்விட்டா் பக்கத்தில், ‘கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இம்மாதம் 31 ஆம் தேதி வரை அனைத்துப் பயணிகள் ரயில் சேவைகளும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கரோனா தடுப்புக்கான ரயில்வே துறையின் சிறப்பான பங்களிப்பு இது. பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் முழு அடைப்பு மற்றும் மக்கள் ஊரடங்கு திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது நல்ல நோக்கத்தினாலான நடவடிக்கை. ஆனால், போதுமானதல்ல. முதல்கட்டமாக குறைந்தபட்சம் மாா்ச் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும். இது பற்றிய அரசு அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்‘ என ராமதாஸ் பதிவிட்டுள்ளாா்.