சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர்கள் நலன் கருதி, இப்போது நடைபெற்று வரும் 11,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27-ஆம் தேதி தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.