சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் மூன்றாம் வகுப்பு படித்துவந்த சிறுவன் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கோனேரி வளவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் நெசவுத்தொழில் செய்துவருகிறார். இவரது மகன் கதிர்வேல் அருகில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது குழந்தையைத் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும்போது தொட்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் பின்புறம் வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுவன் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் தந்தையின் கண் எதிரே மகன் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் தொடர் விபத்துகள் நடப்பதால் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் தொடர் விபத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாரமங்கலம் புறவழிச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.