7 எம்பிக்கள் மீதான சஸ்பெண்டை திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் 7 போ் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடா் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மக்களவையில் அவைத் தலைவா் மேஜையில் இருந்த ஆவணங்களை பறித்துச் சென்றதை அடுத்து அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில், 7 காங்கிரஸ் எம்பிக்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும். தில்லி வன்முறை பற்றி விவாதம் எழுப்ப முயன்ற 7 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
ஜனநாயகத்தின் ஆலயம் நாடாளுமன்றம் என கூறப்படுவதை பாஜக நினைவில் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.