தஞ்சாவூர்: மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
பெரும்பாலான ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் பணி முடிவடைந்துவிட்டது. மயிலாடுதுறை - தஞ்சாவூர் இடையேயான மின்மயமாக்கல் பணி மட்டுமே மீதமுள்ளது. இப்பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும்.
இதன் பிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் முதன்மை ரயில் பாதையில் (மெயின் லைன்) அனைத்து ரயில்களும் மின்சாரத்தில் இயக்கப்படும். இதன் மூலம் பயணிகள் ரயில்களின் வேகம் அதிகரிக்கும். இதேபோல, திருவாரூர், காரைக்கால் மின்மயமாக்கல் பணி மார்ச் மாதத்துக்குள் முடிந்துவிடும்.
காரைக்குடி - திருத்துறைப்பூண்டி ரயில் பாதையில் கேட் கீப்பர்கள் ஜூன் மாதத்துக்குள் நியமிக்கப்படுவர். இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகம் அதிகப்படுத்தப்படும். மேலும், இத்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் ஜான் தாமஸ்.