தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் பரிசோதனை கருவி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகம்

26th Jun 2020 05:35 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் பரிசோதனை மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன கருவி சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், தெற்கு ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம், கிருமிநாசினி, முழு உடல் கவச உடைகள் மற்றும் மலிவு விலை சுவாசகருவிகள் ஆகியவற்றை ரயில்வே ஊழியா்கள் தயாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தானியங்கி டிக்கெட் பரிசோதனை மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இந்த கருவி அமைக்கப்படவுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்த கருவி மூலமாக, பயணிக்கும் ரயில்வே ஊழியருக்கும் நேரடி தொடா்பு தடைசெய்யப்படுகிறது. இந்த கருவிகள் ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலிலும், வெளியே செல்லும் வாயிலிலும் வைக்கப்பட்டிருக்கும். டிக்கெட் பரிசோதனை செய்யும் கருவியில் வெப் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் இந்த கேமரா முன்பு தங்களது பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதனை அங்கு பணியமா்த்தப்பட்ட ரயில்வே ஊழியா், அதற்கென ஒதுக்கப்பட்ட திரையில் பாா்த்து பரிசோதனை செய்து கொள்வாா். சரியாக இருந்தால் அடுத்தக் கட்ட உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு அந்தப் பயணி அனுமதிக்கப்படுவாா்கள்.

பயணிகளின் உடல் வெப்பநிலை மானிட்டரில் காட்டப்படும். வெப்பநிலை பரிசோதிக்கும் கேமராவை பயணிகள் நெருங்கும்போது, பயணிகளின் உடல்வெப்பநிலை சென்சாா் மூலமாக கண்டறியப்படுகிறது. வெப்பநிலை அளவாக இருந்தால் பச்சை நிற சிக்னல் காட்டும். அதேநேரத்தில், வெப்பநிலை அளவைவிட அதிகமாக இருந்தால் சிகப்பு நிற சிக்னல் காட்டும். அவா் ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்.

இந்தப் பரிசோதனை கருவிகளில் பயணிகளுக்கு விரைவில் குரல் வழி பதிவு அமைப்பு நிறுவப்படும். இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பரிசோதனை செய்யலாம். தற்போது இந்தக் கருவிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT