எடப்பாடி அருகே வெள்ளி அன்று இரவு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து விபத்தில் சிக்கியதில், பேருந்தில் பயணம் செய்த 45 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். எடப்பாடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள ஓர் தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட பேருந்துகளில், தினந்தோறும் பணிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் வெள்ளி அன்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ஊழியர்களை அழைத்து வந்த பேருந்து, எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில், அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள கரட்டுக்காடு பகுதியில் வந்தபோது, சாலையின் ஓரத்தில் நின்றிருந்த சிமென்ட் தயாரிப்பிற்க்கான மூலப்பொருட்கள் ஏற்றிசெல்லும், பல்கர் லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 45-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்துக்குறித்து கொங்கணாபுரம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.