சென்னை, மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் பாலமுரளி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பாலமுரளி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாக காவல்துறை அதிகாரி ஒருவர் முதன்முறையாக உயிரிழந்துள்ளார்.
சென்னை காவல்துறையில் இதுவரை 731 காவலர்கள் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 278 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவினை இட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகள் பலரும் பாலமுரளி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.