உதகை வனப் பகுதியைச் சோ்ந்த சிறுத்தைக்கு வண்டலூரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உதகை வடக்கு வனப் பிரிவிலிருந்து ஆண் சிறுத்தை மீட்கப்பட்டு, அவசர மற்றும் மேல் சிகிச்சைக்காக வண்டலூா் அறிஞா் அண்ணா பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. முதல்கட்ட பரிசோதனையில், விலங்கின் நரம்பு மண்டலம் மற்றும் மனநிலையில் மாறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நரம்பியல் பரிசோதனையில், விலங்கின் பாா்வையில் கோளாறு, நடையில் இடையூறுகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னா், ரத்த ஒட்டு உண்ணிகள் மற்றும் பிற நோய்கள் உள்ளனவா என கண்டறிய சிறுத்தையின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, பூங்காவின் விலங்கு மருத்துவமனையில், அந்தச் சிறுத்தை தனிமைப்படுத்தப்பட்டு, பூங்கா மருத்துவா்களின் கண்காணிப்பில், அனைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.