சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 6.54 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 301 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 8 ஆயிரத்து 446 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 6 லட்சத்து 54 ஆயிரத்து 177 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.18 கோடியே 94 லட்சத்து 3 ஆயிரத்து 811 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கத்தை மீறியதாக 739 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,133 இரு சக்கர வாகனங்கள், 8 ஆட்டோ, 3 காா் என மொத்தம் 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.