சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ காவலில் எடுக்கக்கோரிய 5 போலீஸாரை நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீஸார் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, நீதிமன்றத்தின் அறிவுரைப்படி சிபிசிஐடி சில நாள்கள் இந்த வழக்கை விசாரித்துவந்த நிலையில், தற்போது சிபிஐ இவ்வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.
அதன்படி, இந்த வழக்கில் கைதான 5 போலீஸாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், 5 போலீஸாரையும் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிபிஐ அளித்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.