தினமணியின் பாரதியார் விருது பெற்ற எட்டயபுரத்தை சேர்ந்த பாரதி ஆய்வாளர் திரு. இளசை மணியன் (78) அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.
அவரது இயற்பெயர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி கஸ்தூரி கடந்த ஆண்டு காலமானார். பாரதி ஆய்வு, இலக்கிய திறனாய்வு, வரலாற்று ஆய்வு , கதை கவிதை மொழிபெயர்ப்பு, செய்தி விமர்சனம் பாரதி விழா, இலக்கிய விழாக்கள் நடத்துவது, வீதி நாடகங்கள் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபாடு கொண்டவர். பாரதி தரிசனம் என இரண்டு பாகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
மேலும், ரகுநாதன் கட்டுரைகள் மூன்று தொகுப்பு நூல்கள், புதுமைப்பித்தனின் கடைசி நாட்கள், புதுமைப்பித்தன் பற்றி ஆர்கே கண்ணன், ஆர் நல்லகண்ணு கட்டுரைகள் இரண்டு தொகுப்பு நூல்கள் என பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி இலக்கியச் செல்வர் , புதுவை அரசின் பாரதி விருது, அறிஞர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பல்வேறு இலக்கிய மன்றங்களின் சார்பில் விருதுகள் பெற்றுள்ளார்.
இளசை மணியனின் சேவையை பாராட்டி அவருக்கு தினமணியின் பாரதியார் விருது கடந்த ஆண்டு ஆளுநர் வழங்கினார். பாரதி குறித்து இவரது வழிகாட்டுதலில் ஆய்வு செய்து மூன்று மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.