தமிழ்நாடு

அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்: சுப்புராயன் கோரிக்கை

13th Jul 2020 05:44 PM

ADVERTISEMENT

 

சட்டத்தின் சந்து பொந்துகளின் வழியாகத்  தப்பி விடாமல் அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளரும் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்புராயன் கோரிக்கை விடுத்துள்ளார். 

சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டு அங்கு அடுத்தடுத்து இறந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளரும் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன் திங்கள்கிழமை நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது..

ADVERTISEMENT

தமிழகத்தின் சரித்திரத்திலேயே நடந்திராத சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய சட்டரீதியாகக் கடமைப்பட்டுள்ள காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டு எந்த முகாந்திரமும் இல்லாமல் தந்தை மகன் என இருவரை இரட்டைக் கொலை செய்துள்ளனர். வரலாறு காணாத வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை சாட்சி அளிக்கும் ரேவதிக்கு உயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு .அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை முழு பொறுப்பாகும். 

எனவே, அவருக்கு முழு பாதுகாப்பு வழங்குவதுடன் அவருக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி இருக்கிறது அது எப்படி செல்லும் என்பதை அனுமானிக்க இயலவில்லை. இதில் அரசியல் தலையீடு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இடதுசாரி கட்சிகளும் ஜனநாயக இயக்கத்தினரும் குற்றவாளிகளை தப்பிக்க ஏதாவது முயற்சி நடக்கிறதா என்பதை விழிப்புடன் இருந்து  இந்த வழக்கின் போக்கை கண்காணித்துக் கொண்டு வரும். 

சட்டத்தின் சந்து பொந்து வழியாக குற்றவாளிகள் யாரும் தப்பித்து விடக்கூடாது அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகும். அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும். இறந்தவர்களின் குடும்பத்தின் துயரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கு பெறுகிறது எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினார்.

அவருடன் பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி ,தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அழகு முத்து பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் கரும்பன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் மணி, மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட செயலாளர் ஆண்டி, ஒன்றிய செயலாளர்கள் சாத்தான்குளம் செல்வராஜ் ,ஆழ்வார்திருநகரி விஜயகுமார் ,மாநிலக்குழு உறுப்பினர் அழகு ,சாத்தான்குளம் நகரச் செயலாளர் இராஜகோபால் ,கட்டுமான தொழிற்சங்க ஒன்றிய தலைவர் பலவேசம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெரால்ட், சக்திவேல், ஐகோட்ராஜா, கண்ணன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT