துபையில் இருந்து சென்னைக்கு கொகைன் போதைப்பொருள் கடத்தி வந்த தென்ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினா் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த தென்னாப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த கேடிஸ்ட்வெஸ் லிஸி என்ற பெண்ணிடம் விசாரணை செய்தனா். அதில், லிஸி, 800 கிராம் எடையுள்ள கொகைன் போதைப் பொருளை உடலில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, லிஸியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு, சென்னையில் உள்ள போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போதைப் பொருள் கடத்தி வந்த தென்னாப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த பெண் லிஸிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.