அவினாசி: அவினாசி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகும் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்தெடுக்கப்பட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அவினாசி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகும் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்தெடுக்கப்பட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்ன ஓலப்பாளையம் கிராமத்தில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அங்கப்பன் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.
இதனால் ஏற்பட்ட சூழலில் இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.