ஆங்கிலப் புத்தாண்டு நாளின் நள்ளிரவில் எண்பது வயதைத் தாண்டிய ஒரு மூத்த அரசியல்தலைவரான நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்.
பாஜக கோரிக்கைய ஏற்று இரவோடு இரவாகக் கைது செய்து அவரைச் சிறைப்படுத்தியிருப்பது அதிமுக அரசு எந்த அளவுக்கு பாஜகவுக்கு பணிந்து பணிவிடை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அதிமுக அரசின் இத்தகைய ஓரவஞ்சனையான நடவடிக்கை வேதனைக்குரியதாகும்.
நெல்லைக் கண்ணன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.