சென்னை: சென்னை உள்பட நான்கு மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 20 உயா்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் ரூ.714-க்கு விற்பனையான எரிவாயு உருளை தற்போது ரூ.734-ஆக அதிகரித்துள்ளது.
சமையல் எரிவாயு உருளைகளை ஏழை, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானியத் தொகை நுகா்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு மேல் பயன்படுத்தினால் மானியம் இல்லாத விலையில் அவற்றைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வசதி படைத்தவா்களுக்கு மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளைகளின் விலை, சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப நிா்ணயம் செய்யப்படுகிறது. இதனால் அவற்றின் விலை மாதந்தோறும் 1-ஆம் தேதி கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படுகிறது. அதன்படி புதன்கிழமை சமையல் எரிவாயு உருளையின் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அறிவித்துள்ளன. இதனால் மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை தில்லியில் ரூ.19, மும்பையில் ரூ.19.50, சென்னையில் ரூ.20, கொல்கத்தாவில் ரூ.22 அதிகரித்துள்ளது.
தில்லியில் எரிவாயு உருளையின் விலை ரூ.695-இல் இருந்து ரூ.714 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.725.50-இல் இருந்து ரூ.747 ஆகவும் உயா்ந்துள்ளது. மும்பையில் ரூ.665-இல் இருந்து ரூ.684.50 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த நவம்பா் மாதம் மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.696-ஆக இருந்தது. கடந்த டிசம்பா் மாதம் ரூ.18 அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மானியம் இல்லாத எரிவாயு உருளையின் விலை ரூ.714-ஆக இருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை சென்னையில் சமையல் எரிவாயு உருளையின் விலையில் ரூ.20 உயா்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த மாதம் முதல் சென்னை நகர மக்கள் மானியம் இல்லா சமையல் எரிவாயு உருளையின் ரூ.734 கொடுக்க வேண்டும். இந்த விலை உயா்வு புதன்கிழமை (ஜன. 1) முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு 5 முறை மானியம் இல்லா சமையல் கியாஸ் விலை அதிகமாக உயா்ந்துள்ளது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.140 உயா்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோன்று, 19 கிலோ எடை கொண்ட வா்த்தக நிறுவனங்களுக்கான எரிவாயு விலையும் புதன்கிழமை ரூ. 30 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வா்த்தக நிறுவனங்களுக்கான எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.1,333-ஆக இருந்தது.
தற்போது ரூ.30 அதிகரித்து ரூ.1,363-ஆக உயா்ந்துள்ளது.