தமிழ்நாடு

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்: ராமதாஸ்

2nd Jan 2020 07:42 PM

ADVERTISEMENT

சென்னை: காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிா்ச்சி அளிக்கின்றன. இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றும், புனிதமான நதிகளில் குறிப்பிடத்தக்கதுமான காவிரி ஆறு அசுத்தங்களாலும், கழிவுகளாலும் நஞ்சாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க உதவ மறுப்பது நியாயமற்றது.

காவிரியை தூய்மைப்படுத்துவதற்காக ‘‘நடந்தாய் வாழி காவேரி’’ என்ற திட்டத்தை தமிழக அரசு தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை, தமிழக முதல்வா் பழனிசாமி சந்தித்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அதன் தொடா்ச்சியாக கடந்த டிசம்பா் இறுதியில் தில்லியில் மத்திய நீா்வள அமைச்சக செயலாளா் யு.பி.சிங்கை சந்தித்த தமிழக தலைமைச் செயலா் சண்முகம், இத்திட்டம் மற்றும் அதற்கான நிதியுதவி பற்றி நினைவூட்டியிருக்கிறாா்.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுக்க முடியாது. ஏனெனில், காவிரி ஆற்றை அசுத்தப்படுத்தியதில் பெரும்பங்கு கா்நாடக அரசுக்கு உண்டு. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டா் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. இதை கா்நாடக சட்டப்பேரவையில் அந்த மாநில அமைச்சா் ஒருவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறாா்.

மேலும், காவிரி ஆறு மாநிலங்களிடையே ஓடும் ஆறு என்ற வகையிலும் அதன் தூய்மைப்பணிக்கு மத்திய அரசு கட்டாயமாக உதவ வேண்டும். கங்கை ஆற்றை தூய்மைப்படுத்த 2020-ஆம் ஆண்டுக்குள் ரூ.20,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்து, மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. யமுனை ஆற்றை சீரமைக்கும் திட்டத்துக்காக உத்தரப்பிரதேசம், ஹரியாணா, தில்லி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1,515 கோடி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு இருக்கும்போது காவிரியை தூய்மைப்படுத்துவதற்காக நிதி உதவி வழங்க மத்திய அரசு மறுப்பது நியாயமல்ல.

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மானியமாகவும், தமிழக அரசின் பங்களிப்பு தவிர மீதமுள்ள தொகையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகவும் பெற்றுத்தர மத்திய அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT