சீர்காழி நகராட்சி உட்பட்ட பகுதியில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சீர்காழி ஈசானியம் தெருவில் உள்ள வாரச் சந்தை அமைக்கப்படும் இடம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள திருத்தோணிபுரம் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது, திருத்தோணிபுரம் வாய்க்காலில் புதிய பாலம் கட்டப்படும் பகுதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அங்கு சாலைகள் சேதமடைந்து இருப்பதையும், பின்னர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் தரை தளம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் பிரசாந்த், சீர்காழி நகராட்சி ஆணையர் வசந்தன் பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஈசானிய தெரு ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த நேரத்தில் திறக்காதது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். மேலும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.