இனி வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தமிழகத்தில் 1.36 கோடி சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது தொலைபேசி மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ள செல்ஃபோன் எண்ணில் இருந்து இனி வாட்ஸ் ஆப் மூலமாகவும் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
சரியான கட்டணம், சரியான எடை, முறையான சீல் மற்றும் முறையான சேவை உள்ளிட்டவை குறித்து வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம். இதேபோல், இந்தியன் ஆயில் நிறுவன இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் சந்தேகங்கள் குறித்து தெளிவு பெறவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் சென்னையில் மூன்று இடங்களில் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.