மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 மாதங்களுக்குப் பிறகு மலை ரயில் சனிக்கிழமை இயக்கப்பட்டது. மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்க பட்டதால் டிக்கெட் கட்டணம் நூறு மடங்கு உயர்ந்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி உதகை-குன்னூர் மலை ரயில் பாதை இடையே பெய்த கன மழையில் தண்டவாளத்தில் மண் சரிவுகள், மரங்கள் விழுந்தது. இதனால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மலை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கரோனா பொதுமுடக்கத்தால் மலை ரயில் சேவை காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 8 மாதத்திற்கு பின்பு மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு புறப்பட்டு உதகைக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மீண்டும் உதகையில் இருந்து சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறது. 4 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயிலில் 170 பயணிகள் பயணிக்க முடியும்.
மேலும் மலை ரயில் கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.4.80 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் வசம் மலை ரயில் சேவை ஒப்படைக்கப்பட்டதால் பயண கட்டணம் 100 மடங்கு உயர்ந்திருப்பதால் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் அனைத்துத்தரப்பு மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.