சென்னை: சென்னையில் தொடர்ந்து பல வாரங்களாக கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகவே நீடித்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 3,451 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் கடந்த வாரம் வரை கோடம்பாக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 364 ஆகக் குறைந்தது. அதேவேளையில் அடையாறில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கடுத்த இடத்தில் அண்ணாநகரில் 385 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,451 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2% ஆகும்.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2,16,867 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,09,549 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,867 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78 சதவீதமாகும்.
கரோனா பாதித்தவர்களில் 60.95 சதவீதம் பேர் ஆண்கள், 39.05 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
அம்பத்தூர், திருவிகநகர், அண்ணநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.