சென்னை: தமிழகத்தின் 2,600 இடங்களில் 2 கோடி தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கரோனா தொற்றுக்கு இதுவரை 7.86 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கிடையே நாட்டின் பல மாநிலங்களில் கரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்வதில் இறுதிக் கட்டம் எட்டப்பட்டுள்ளது.
இதைத் தவிர, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அவ்வாறு அந்த தடுப்பூசிகள் அறிமுகமாகும்பட்சத்தில் அவற்றை முறையாக மக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதற்கென வழிகாட்டுக் குழுவும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடா்ச்சியாக தற்போது தடுப்பூசிகளை இருப்பு வைப்பதற்கான வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று முதல்வா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். அதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார மையங்கள், மாநில மருத்துவப் பணிகள் கழகம் என தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 2,600 இடங்களில் தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு மொத்தமாக 2 கோடி தடுப்பூசிகளைத் சேமிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.