புரெவி புயல் நிவாரண முகாம்களில் 1,21,445 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 28.10.2020 அன்று தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் 05.12.2020 வரை உள்ள இயல்பான மழையளவு 377.1 மி.மீ.-ல், 385.5 மி.மீ. அளவு பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைவிட 2 சதவீதம் கூடுதலாகும்.
செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமான அளவும்,
அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 19 மாவட்டங்களில் இயல்பான அளவும் மீதமுள்ள 8 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 14,144 பாசன ஏரிகளில், 3,487 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. கடலோர மாவட்டங்களில் உள்ள 7,411 ஏரிகளில், 2,293 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. இதுவன்றி, தென் மாவட்டங்களான, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7700 ஏரிகளில், 1172 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
நிவாரண முகாம்: புரெவி புயலால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாரூர், கடலூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 515 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு
அதில் 47,727 ஆண்கள், 51,728 பெண்கள் மற்றும் 21,990 குழந்தைகள் ஆக மொத்தம் 1,21,445 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.