ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் ஸ்வேதா(13). ஆலங்குடியில் அரசு உதவிபெரும் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் இவர், வெள்ளிக்கிழமை வீட்டு மாடியில் விளையாடிக்கொண்டிருந்தாராம். அப்போது, அருகாமையில் சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மாடியில் இருந்து கீழே விழுந்த ஸ்வேதா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதேபோல, ஆலங்குடி அருகேயுள்ள நம்பன்பட்டியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் மகள் அஞ்சலி(16). ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்றுவரும் இவர், வீட்டில் வெள்ளிக்கிழமை வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டு வாசலில் இருந்த எர்த் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலே உயிரிழந்தார். பள்ளி மாணவிகள் இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆலங்குடி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.