திருநெல்வேலி: பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே வெள்ளிக்கிழமை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஒட்டுநர் காயமடைந்தார்.
பாளையங்கோட்டை மார்கெட் அருகே உள்ள மூர்த்தி நாயனார் தெருவில் வசித்து வருபவர் இருதயராஜ் (70). இவர் ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவரது மனைவி வேலம்மாள். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளுக்குள் இருதயராஜ் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கும், பாளையங்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிவிரைவு படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்த இருதயராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டதால் இதயராஜ் காலில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் செல்வன், வருவாய் ஆய்வாளர் மைதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பாளையங்கோட்டை காவல் துறையினரும் விசாரணை நடத்தினர். அதில், வீட்டின் மேற்கூரையில் தண்ணீர் வடிந்து செல்ல உரிய குழாய் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி சுவர் பலவீனமடைந்த்து தெரியவந்தது. காலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.