தமிழ்நாடு

தமிழகத்தில் குடிநீா்ப் பிரச்னை இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி

DIN

அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? என்று தெரியவில்லை என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து ஆற்றிய உரை: மக்கள்தொகை பெருகி வருகின்ற இந்தச் சூழ்நிலையில், மதுரை மாநகர மக்களுக்கு தங்குதடையில்லாமல் 24 மணிநேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தொடர்ந்து அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அரசால், சுமார் ரூபாய் 1,296 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கிடைக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம். 

தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் 7,600 மில்லியன் லிட்டர் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகிறோம். 

இந்த ஒன்றரை ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 2,700 மில்லியன் லிட்டர்  குடி தண்ணீரை தடையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய துணைக் கண்டத்தில், குறுகிய காலத்தில் இந்தளவு குடிநீர் கொடுத்த வரலாறு கிடையாது. அந்த வரலாற்றைப் படைத்ததும் தமிழக அரசுதான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல 76 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கி படிப்படியாக நிறைவேற்றுகின்றபோது, தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையே இல்லையென்கிற நிலையை உருவாக்குகின்ற அரசாக தமிழக அரசு திகழும். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் வழங்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு, ரூபாய் 3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இதுவரை 7 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பல ஆண்டு காலமாக குடிநீருக்காக போராடுகின்ற நிலையை மாற்றி, தமிழகம் முழுவதும் நிலையான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டுமென்ற இலட்சியத்தை அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டம் 2023- ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவேற்றப்படும். இத்திட்டத்தின் வாயிலாக சுமார், கூடுதலாக, 1 இலட்சத்து 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கி, மதுரையிலுள்ள 100 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கக்கூடிய நிலையை அரசு உருவாக்கி வருகிறது. ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் வாயிலாக மதுரை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

1916-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், இடவசதி போதாமல் உள்ளது என்ற கோரிக்கையை ஏற்று, அரசு கூடுதல் கட்டடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சீர்மிகு திட்டத்தின் கீழ், மதுரை மாநகரத்தில் ரூபாய் 974.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாட்டுத்தாவணி பகுதியில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் பழச்சந்தை, பெரியார் பேருந்து நிலையத்தை ரூபாய் 167 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், புராதானச் சின்னங்கள் மற்றும் தெரு விளக்குகளை ரூபாய் 73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், மீனாட்சி அம்மன் கோவில் அருகில் சுமார் ரூபாய் 42 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், மதுரை மாநகருக்கு அழகு சேர்க்கும் விதமாக அதிகமான பூங்காக்கள் என அமைத்துக் கொடுத்திருக்கிறோம். விளக்குத் தூண் மற்றும் பத்துதூண் பகுதிகளை புனரமைத்தல், திருமலை நாயக்கர் மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துதல், சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அமைத்தல், நான்கு மாசி வீதிகளில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் சிறப்புச் சாலை அமைத்தல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வைகை வடகரைப் பகுதிகளில் ரூபாய் 276 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை அமைத்தல், தமுக்கம் மைதானத்தில் சுமார் ரூபாய் 47.7 கோடி மதிப்பீட்டில் கலாச்சார மையம் கட்டுதல், பொதுப்பணித் துறை மூலம் சுமார் ரூபாய் 84 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் மற்றும் இரு கரையோரப் பகுதிகளில் தலா சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுதல், நான்கு வழிச்சாலை மற்றும் பூங்காக்கள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சுமார் ரூபாய் 303 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் இரு கரையோரப் பகுதிகளில் தலா 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டி, நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி நிதியின் கீழ், சுமார் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ரூபாய் 23.17 கோடி மதிப்பீட்டில் குருவிக்காரன் சாலைப் பகுதியில் பாலம் கட்டப்பட்டு வருகின்றது.

மதுரை மாநகரில் பாரத்மாலா யோஜனா திட்டத்தின் கீழ் மதுரை - செட்டிக்குளம் உயர்மட்டப் பாலம் ரூபாய் 544.23 கோடி மதிப்பீட்டிலும், செட்டிக்குளம்-நத்தம் நான்கு வழிச்சாலை ரூபாய் 345.54 கோடி மதிப்பீட்டிலும், மதுரை வெளிவட்டச் சாலை வாடிப்பட்டி முதல் திருமங்கலம் வரை ரூபாய் 493.02 கோடி மதிப்பீட்டிலும், மேலூர்- காரைக்குடி நான்கு வழிச்சாலை ரூபாய் 659 கோடி மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகரில், தேசிய நெடுஞ்சாலை 49 நீட்சியில் பல்வழி மேம்பாலம் மற்றும் மைய தடுப்புச்சுவர் அமைத்தல் மற்றும் வடிகால் அமைக்கும் பணி ரூபாய் 52.04 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்பொருட்டு, மீனாட்சி மருத்துவமனை முதல் கப்பலூர் வரை ரூபாய் 209 கோடி மதிப்பீட்டில் மதுரை சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் காலவாசல் சந்திப்பு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் காரணமாக, விமான நிலையம் அருகேயுள்ள சுற்றுச் சாலையை, விமான ஓடுதளத்திற்கு, சாலை கீழ்ப்பாலமாக அமைக்க ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

அரசால் நிறைவேற்றப்படும் இத்தனைத் திட்டங்களும் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? என்று தெரியவில்லை. இந்தத் திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. ஆனால், இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று திமுக தலைவர் சொல்கிறார். அவர் வெளியில் வந்து பார்த்தால்தானே இங்கே நடைபெறுகிற பணிகள் தெரியும். அறையின் உள்ளே அமர்ந்து பார்த்தால் அறைதான் கண்ணுக்குத் தெரியும். எனவே, அறையிலிருந்து வெளியில் வந்து பாருங்கள், மதுரை மாநகரத்தில் நான் அறிவித்த பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது ஒரு அவதூறு செய்தியை சொல்லி, எப்பொழுதும் எங்கள் மீது பழி சுமத்துவதுதான் இவர்களுடைய வாடிக்கை. இவர்கள் என்ன செய்வோம் என்று இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆனால், நாங்கள் செய்ததையும் பாராட்ட மனம் கிடையாது. ஒரு அரசாங்கம் அமைப்பது என்றால், அந்த அரசாங்கத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேறுகிறது என்பதை நாங்கள் புள்ளிவிவரங்களோடு கூறுகிறோம்.

இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றோம். ஒன்றுமே செய்யவில்லை என்றால், இவை எல்லாம் இந்த மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட திட்டங்கள். இன்றைக்குக்கூட, சுமார் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அடுத்த சந்ததியினருக்கு குடிநீர் பிரச்சினை வரக்கூடாது என்ற அளவிற்கு தொலைநோக்குப் பார்வையோடு இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம். இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, ஏற்கனவே பல கூட்டுக் குடிநீர் திட்டங்களை நான் திறந்து வைத்திருக்கின்றேன். அம்மாவின் அரசைப் பொறுத்தவரை, குடிநீர் பிரச்சனை இருக்கக்கூடாது என்பதைப் பிரதான கொள்கையாகக் கொண்டு எங்கு குடிநீர் பிரச்சனை இருந்தாலும், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நகரப்பகுதிகளில் மட்டுமன்றி, கிராமப்புற மக்களுக்கும் குழாயின் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ரூபாய் 3,600 கோடி மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து இந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்துக் கொடுக்கின்றோம்.

ஆகவே, எங்கள் அரசைப் பொறுத்தவரை, இரவு, பகல் பாராமல் எங்களுடைய அமைச்சர் பெருமக்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செயலாக்கத்திற்குக் காரணம் மரியாதைக்குரிய துணை முதலமைச்சர். அவர் நிதி அமைச்சராக இருக்கின்றார். எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதற்கேற்றவாறு நிதியை உருவாக்கி எங்களுக்கு வழங்கிக் கொண்டேயிருக்கின்றார். துணை முதலமைச்சர் நிதி அமைச்சராக பல ஆண்டுகாலம்  அமைச்சரவையில் இடம் பெற்று, மிகுந்த அனுபவம் இருப்பதால் இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்கி, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறார்  என்பதை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதேபோல, உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களும், அரசு அறிவித்த திட்டங்களை செவ்வனே செயல்படுத்தியதன் காரணத்தால், அதிகமான விருதுகளை உள்ளாட்சித் துறையின் மூலமாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். தேசிய அளவில் அதிக விருதுகளை குவித்த துறை உள்ளாட்சித் துறை. இதுபோன்று, எல்லாத் துறைகளிலும் தேசிய விருதுகளை குவித்த அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய்த் துறை என்று அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டுறவுத் துறையை எடுத்துக் கொண்டால், ஏழை, எளிய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வேளாண் பெருமக்களுக்கு கடனுதவி வழங்கும் அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. உரிய காலத்தில் கடனுதவி வழங்குகின்ற காரணத்தால், என்றைக்கும் இல்லாத அளவிற்கு தற்பொழுது டெல்டா பகுதியில் அதிக விளைச்சலை கண்டிருக்கின்றோம். அதேபோல, வருவாய்த் துறையில் தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசாக அம்மாவின் அரசு இருந்து கொண்டிருக்கிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். விரைவாக அந்தத் திட்டம் துவங்கவிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, மருத்துவமனையையும் மதுரையில் உருவாக்கித் தந்திருக்கின்றோம்.

அதேபோல, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வரலாற்றுச் சிறப்புமிக்க 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கின்றோம். சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் நிலை பற்றி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கிராமப்புறத்தில் படிக்கின்ற மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். அப்படி அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற 41 சதவிகிதம் மாணவர்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலமாக 6 மாணவர்களுக்குத் தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்த 313 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. இந்த உள் ஒதுக்கீட்டின் மூலமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 3 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 13 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 10 ஆதிதிராவிட மாணவர்கள், என 26 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. 
சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவை நனவாக்கிய அரசு எங்களுடைய அரசு. சிறப்பான சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கின்றோம், ஏராளமான தடுப்பணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றோம், நீண்ட காலமாக தூர்வாரப்படாத ஏரிகளெல்லாம் விவசாயப் பிரதிநிதிகளை கொண்டு தூர்வாரி, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் சேமித்து வைக்கக்கூடிய ஒரு திட்டத்தை எங்களுடைய அரசுதான் உருவாக்கித் தந்திருக்கின்றது. இப்படி பலவேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக வைத்து எங்களை வசைபாடாத நாளே கிடையாது என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT