நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடிச் செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் 200 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கி அழுகும் அபாய நிலையில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் கடந்த நான்கு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. முற்றிலும் விவசாயம் சார்ந்த இப்பகுதிகளில் குறுவை அறுவடைக்குப் பின்னர் தாளடிப் பயிரும் முதல் போகமான சம்பாச் சாகுபடியும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடிச் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக நன்னிலம், குடவாசல் பகுதியில் நெம்மேலி, நெய்க்குப்பை, தோட்டாக்குடி, நாடாக்குடி, அதம்பார், அச்சுதமங்களம் போன்ற பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள, 45 நாள்களே ஆன சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை நீரில் மூழ்கியுள்ளது.
பெய்து வரும் கனமழைக் காரணமாக வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடிய முடியாமல் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மேலும் ஓரிரு நாள்கள் மழைத் தொடர்ந்தால் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவித்ததாவது,
குடிமராமத்துப் பணிகளில் அரசின் சார்பாக, ஆறுகளும், தலைப்பு வாய்க்கால்களும் மட்டுமே ஓரளவு தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டன. ஆனால் வயல்களுக்கு நீர் பாயக்கூடிய மற்றும் வடியக்கூடிய உள் வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தினால், மழை நீர் வடிய முடியாமல் நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம் உருவாகிவிட்டதாக ஏக்கத்துடன் தெரிவித்தனர்.
எனவே அரசு அதிகாரிகள் உடனடியாகப் போர்க்கால நடவடிக்கை எடுத்து, உள்வாய்க்கால்களைத் தூர்வாரி வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லையெனில், மேலும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்தால், சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் முற்றிலும் அழுகி வீணாகிவிடும். இதன் காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.