ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும் அதன் பிறகு கேளுங்கள் என்று ரஜினி கட்சித் தொடங்குவது பற்றிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு பின்பு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வரிடம் ரஜினிகாந்த் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், அவர் முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும்.
அதற்குப் பிறகு கேளுங்கள் என்றார். தொடர்ந்து, ரஜினி கட்சி ஆரம்பிக்கவிருப்பதை துணை முதல்வர் வரவேற்றுள்ளாரே? என செய்தியாளர்கள் அடுத்த கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான். அனைவரும் கருத்து சொல்லலாம். கருத்து சொல்வது தவறு கிடையாது.
என்னைப் பொறுத்தவரை அவர் முதலில் கட்சியை பதிவு செய்தால்தான், கட்சி என்று வரும்போது அதற்கு பதில் சொல்லலாம். அதை விட்டுவிட்டு, நீங்கள் ஏதோ ஒரு கற்பனையில் கேள்வி கேட்டால் அதற்கு எப்படி பதில் கொடுக்க முடியும். ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டும். நீங்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பீர்களென்று தெரியும். அதற்கும் நாங்கள் தயாராகத்தான் வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.