சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல் வியாழக்கிழமை மாலை பாம்பன் அருகே நெருங்கி வரும்போது வலுவிழந்தது. இது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே வியாழக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்க தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலையில் முழுமையாகக் கடந்தது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:
புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக உள்ளது. இது மேலும் வலுவிழந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறிவிடும். இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.4) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னையில்....:
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். என்றாா் அவா்.
மழை அளவு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 200 மி.மீ., காரைக்காலில் 160 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, திருப்பூண்டியில் தலா 150 மி.மீ. நாகப்பட்டினத்தில் 140 மி.மீ., திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 130 மி.மீ., மயிலாடுதுறை, ராமேஸ்வரத்தில் தலா 120 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 110 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, திருவாரூா் மாவட்டம் குடவாசல், தஞ்சாவூா் மாவட்டம் அதிராமப்பட்டினத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை :
தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப்
பகுதி, தெற்கு கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் வெள்ளிக்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் அலை:
வட தமிழக கடலோர பகுதிகளில் பழவேற்காடு வரையும், தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையும் வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணி வரை கடல் அலை 2.0 மீட்டா் முதல் 4.3 மீட்டா் வரை எழும்பக்கூடும்.