சென்னை: சட்டப் படிப்புகளுக்கான அரியர் தேர்வு கால அட்டவணை தொடர்பாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் சட்டப் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரியர் தேர்வுகளை ஆன்லைன் அல்லது ஆஃப் லைன் மூலமாக நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சட்டப் படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அகில இந்திய பார் கவுன்சில் தரப்பில், அரியர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அரியர் தேர்வு எப்போது நடத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். அப்போது சட்டப் பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், சட்டப் படிப்புகளுக்கான அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான கால அட்டவணை குறித்து சிண்டிகேட் குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.