விழுப்புரம் மாவட்டத்தில் புரெவி புயல் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரமாக பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கம் காரணமாக புதன்கிழமை மாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோரப் பகுதியான மரக்காணம் தொடங்கி புதுவை அருகே உள்ள கோட்டகுப்பம் வரை, இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
புதன்கிழமை முதல் கடல் சீற்றம் காரணமாக கடல் அலை உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமத்தில் இருந்து புதன்கிழமை முதல் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
வியாழக்கிழமையும் சீற்றம் தொடர்ந்ததால் மீனவர்கள் மரக்காணம் அருகே எக்யர்குப்பம், சின்ன முதலியார் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தங்கள் படகுகளை கரையோரமாக பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.