திருச்சி: புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடவும், ஏற்கெனவே தாங்கள் அறிவித்தபடி அமித்ஷா வீட்டு முன் போராடச் சென்ற அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்ய்பட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் மாத இறுதியில் புதுதில்லி சென்று அமித்ஷா வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. இதற்காக, கடந்த மாதம் 24 ஆம் தேதி புதுதில்லி புறப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை போலீசார் கைது செய்து தில்லி பயணத்தை தடை செய்தனர்.
இந்த சூழலில், மீண்டும் 2ஆவது முறையாக அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை புதுதில்லிக்கு புறப்பட ஆயத்தமாகினர்.
அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி பின்னர், திரளாக திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்திலேயே விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி செல்வதாகக் கூறி விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜங்ஷன் பகுதியில் உள்ள திருமண மஹாலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால், ரயில் நிலையத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.