வேதாரண்யம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக வேதாரண்யத்தில் 20 செ.மீ மழை பதிவானது.
புயல் இலங்கை வழியாக நகர்ந்து சென்ற போதிலும் இலங்கைக்கு அருகேயுள்ள வேதாரண்யம் பகுதியில் அதன் பாதிப்பு இருந்தது.
செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய காற்று புதன்கிழமை இரவு படிப்படியாக அதிகரித்து இரவு முழுதும் தொடர்ந்தது.
ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட தாழ்வான கிராமங்களில் மழை நீர் பெருக்கெடுத்தது.
தாழ்வான விளை நிலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து வருகிறது. மழை தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.