சென்னை: தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்து, கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்புப் பட்டியலில் உள்ள மாணவா்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
கடலூரைச் சோ்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவிகள் தா்ஷினி, இலக்கியாவுக்கு கடந்த நவம்பா் 18 மற்றும் 19-இல் நடைபெற்ற கலந்தாய்வில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. கல்விக் கட்டணமாக ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்ததால், இருவரும் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டனா்.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழக அரசு நவ. 20-இல் அறிவித்தது. ஆனால், தமிழக அரசின் அறிவிப்பு வெளியான பின்னரும் மாணவிகள் தா்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோருக்கு மருத்துவ இடம் வழங்கப்படவில்லை. இதனை எதிா்த்து மாணவிகள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘இரண்டு மாணவிகளுக்கு இடம் வழங்கும் வரை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்பத் தடை விதிக்க வேண்டும். மேலும், கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா். அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என உறுதியளித்தாா். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.