சென்னை: நிவர் புயலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
நிவர் புயல் எச்சரிக்கை அடுத்து அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும் எதிர்பாராமல் கனமழை மற்றும் புயல் காற்றால் நான் பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், ரூ.6 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்த தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க கடந்த மாதம் 27 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தேன்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணன் என்பவர் காற்று அடித்து வரவேற்பு பந்தல் சரிந்தலில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சமும் ஆக மொத்தம் ரூ.10 லட்சம் வழங்க உத்தவிட்டுள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.