பூம்புகார்: நாகை மாவட்டம், பூம்புகாரில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கியது.
அண்மையில் வீசிய நிவர் புயல் காரணமாக சீர்காழி வட்டத்துக்கு உள்பட்ட பூம்புகார், வானகிரி கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், அவர்களது விசைப் படகுகளை பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், பூம்புகார் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த காற்றால், வானகிரி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது விசைப் படகு கடலில் மூழ்கியது.
இதையடுத்து, இருகிராம மீனவர்களும் மூழ்கிய படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் அங்குச் சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து வானகிரி மீனவ கிராம பொறுப்பாளர்கள் கூறுகையில், கனமழையால் மூழ்கிய விசைப் படகுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.