காரைக்கால் : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக செவ்வாய்க்கிழமை வலுவடைந்ததால், காரைக்கால் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தெற்கு வங்கக் கடல் மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக செவ்வாய்க்கிழமை வலுவடைந்தது.
இது மேலும் புயலாக வலுப்பெற்று, நாளை இலங்கையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. திடீரென காற்றுடன் மழை பெய்யும் என்பது இதன் பொருளாக தெரிவிக்கப்படுகிறது.