சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாயன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கக் கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது புதன் காலையில் புயலாக வலுப்பெறும்.
இந்தப் புயலானது டிசம்பர் 2-ம் தேதி மாலை இலங்கையின் திரிகோணமலையை கடக்கும். அடுத்து மன்னார் வளைகுடா பகுதிக்குள் வரும்.
இந்தப் புயலானது டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
புயல் கரையை கடக்கும் போது 75-95 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.